Thursday, 4 September 2008
சுள் என சுட்ட மழை!
இந்த உலகத்தில் நான்! எனக்குள் ஓர் உலகம்!
தனிமையும்,அமைதியும் என்னை "என்" உலகத்திற்கு
அழைத்து சென்றது!
மேகங்கள் கட்டி அணைக்க,
மரங்கள் முத்தமிட,
வெட்கத்தில் சிவந்தது வானம்!
பொறாமையில் பறவைகள் கீச் கீச் என கிசு கிசுக்க,
மின்னலை அக்னியாக்கி இயற்கை இன்று எழுதிய காதல் அதியாயம்!
காதலின் உச்சியில் பொழிந்தது பேய் மழை!
காதலின் அடையாளச் சின்னமாய்!
காற்றுக்கு இசைந்து மழை நடத்தியது ஓர் அரங்கேற்றம்!
என் உலகத்தில் எங்கே நான்?அதோ! ஒரு கூரை
பள்ளிக்கூடத்தில்,மண் சுவற்றில் ,காற்று நுழைய இட்ட
துவாரத்தின் வழியே ஏக்கத்துடன் எட்டி பார்த்துக்கொண்டு...
பள்ளிக்கூடத்தின் கடைசி மணி அடிக்க காத்திருந்த படி...
மணி ஒலித்தது!
சல்லிக்கட்டில் களம் இறங்கும் காளை போல், துள்ளிக்குதித்து ஓடியது மனம்!
அதை தொடர முயற்சித்தது என் கால்கள்!
மழையோடு உறவாடி நின்றேன்!
என் மேல் விழும் ஒவ்வொரு துளியையும் இரசிக்க சற்றே கண் மூடினேன்!
கண் திறந்து பார்த்தால்....
வீட்டின் கூரையில் வைக்கோல் கூறுகள் விலகியதால்
மழை என்னை உண்மையில் நனைத்துக் கொண்டிருந்தது!
மெய் மறந்து நான் உறங்கினாலும்
"மெய்" மறைவதில்லை!
தமிழ்!
காதல்!
தீ மேல் திரி கொண்ட மோகம் போல்
எரிந்து திரிந்து சாம்பலாய் மாய்வேன் என்று தெரிந்தும்
மீண்டும் மீண்டும் காதலிப்பேன்!
புத்தாண்டில் என் படைப்பு!
தரணி அளக்க பல திசை பிரிந்தோம்.
ஆழ் கடல் தாண்டி திரவியம் தேடினோம்.
திசை அறிந்து ஓடும் சிலர் ...அதை அறியாமல் ஓடும் பலர்..
உலகம் உருண்டை .ஒரு நாள் சந்திப்போம் ஓட்டம் தொடங்கிய தமிழ் தாய் மடியில்.
மலை உச்சியில் இருந்து உருண்டோடும் பாறைகள் நாம்.
உடைந்து சிதறி மண் ஆகும் முன் வந்தடைவோம் நம் மண்ணுக்கு.
அடுத்த பயிர் தளிர்த்து வளர உரமாவோம்.
புத்தாண்டு ..இது அடுத்த புது ஆண்டு..
காலம் நம்மை ஆளும் காலம் மாறி ..நாம் காலத்தை ஆள??
எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெற ..
மனமாற வாழ்த்தும் இவன்.....
